Saturday, July 24, 2010

மரணம் நிகழ்ந்த வீடு...

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அதனதன் இயல்பு மாறியிருக்கிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
வந்து போகும் அத்தனை முகங்களிலும்
ஒரு இறுக்கம் திணிக்கப்படுகிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அழும் உறவுகளைத் தேற்றுவதெப்படியென
யாருக்கும் புரிவதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
யாருக்கும் பசிப்பதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு
சந்திக்கும் உறவுகளும்
புன்னகை பரிமாறுவதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
இறந்தவரின் மகனோ மகளோ
அனைவராலும்
கூர்ந்து கவனிக்கப்படுகிறார்கள்.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
மரணம் நிகழ்ந்த விதம்
விவரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
தொடர்ந்த சில நாட்களுக்கு
மரணம்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

1 comment:

கவிநா... said...

அப்பட்டமான உண்மை.. அழகான கவிதையாக்கப்பட்டிருக்கிறது உங்களால்.
நன்று நண்பரே..