Saturday, October 17, 2009
சந்திப்போம்... பிரிவோம்...
நீண்ட நாட்களுக்கு பின் வந்தாய்...
அறிவிப்பில்லாத மழையை போல சிலசமயம்..
நிகழ்ந்து விடுகிறது இது போன்ற சந்திப்புகள்..
உன் கண்களின் பரிச்சயம்..
ஏனோ அந்நியமாய் தோன்ற...
என் நலம் வினவினாய்....
எதனை சொல்ல...
வாழ்க்கையென நினைத்த காதல்
வெறும் வார்த்தையென ஆன பின்னும்...
தொடர்ந்து செல்லும் வாழ்க்கை...
எதிர்ப்புகளை சமாளிக்கும் காதல் கூட...
எதிர்பார்ப்புகளின் முன் தோற்கும் என்பதற்கு..
நாமே சாட்சிகளாகி போனோம்...
கனவுகளுக்காய் உறங்கிய நாட்கள் தொலைத்து...
உன் நினைவுகளால் விழித்திருந்த இரவுகள்...
சுவாசப்பை முழுதும் நினைவுகள் நிரப்பி...
மூச்சு திணறிய ராத்திரி தருணங்கள்...
தினம் கண்கள் விழித்ததும் அவசரமாய்...
உன் குறுஞ்செய்தி எதிர்பார்த்து ஏமாறுவதும்...
அடுத்தவருக்கான அழைப்புகளுக்கும்...
என் அலைப்பேசி தொட்டு பின் சுதாரிப்பதும்...
இத்தனை இருந்தும்...
சொல்வதில் அர்த்தமில்லை...
வரவழைத்த புன்னகையுடன்...
நலமென பொய்யுரைத்து...
உன் நலம் வினவினேன்.
சிறிது மௌனத்திற்கு பின்
புன்னகைத்து நலமென்றாய்.
ஒன்றாய் தேநீர்...
கட்டாய புன்னகைகள்...
கொஞ்சம் வார்த்தைகள்...
நிறைய மௌனம்...
பின் ஒரு புன்னகையில்
விடைப்பெற்றாய்...
ஏனோ இம்முறையும்...
காரணம் கேட்க தோன்றவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல வரிகள் ,எனக்கு இந்த கவிதையை என் ப்ளாக் கில் போட உங்கள் அனுமதி வேண்டும்
http://yeneludhukol.blogspot.com
http://yenthorigai.blogspot.com
Post a Comment