Saturday, October 17, 2009

நீ... சில குறிப்புகள்...


இது...
உன்னை பற்றிய சில குறிப்புகள்...
உன்னால் எனக்குள் பற்றிய சில குறிப்புகள்...

இரு துளை மட்டுமே கொண்ட
மிக அழகிய புல்லாங்குழல்...
உன் நாசி...

எல்லோரையும் போல...
வெறும் காற்றை தான் உள்ளிழுக்கிறாய்.
ஆனால் நீ வெளிவிடும் காற்று மட்டும்..
எனக்கான ராகமாகிறது.

சூரியனை சுற்றி வரும் பூமி தெரியும்.
கண்களில் சூரியனை வைத்துக் கொண்டு...
பூமிக்குள் சுற்றி வருபவள் நீ.

எல்லோரையும் போல்தான்...
இமை மூடி திறக்கிறாய்.
எனக்குதான் ஒவ்வொரு முறையும்...
உலகம் இருண்டு போகிறது.

இத்தனை அழகாக உறங்க...
எங்கேதான் கற்றுக் கொண்டாயோ...

நீ உறங்கும் அழகை ரசிப்பதற்க்காய்...
தாமதமாய் வர சொல்லி...
சூரியனிடம் கெஞ்சுகிறது நிலவு.

எல்லோரையும் போல்தான்...
மழையில் நனைகிறாய்.
எவருக்கும் தெரியாமல்
உன்னில் நனைகிறது மழை.

மழையில் நனைந்தபடி...
குழந்தைகளோடு ஆடுகிறாய்.
தானும் குழந்தையாகி...
ஆட துவங்குகிறது மழை.

எதை பற்றியும் கவலை கொள்ளாத
ஒரு குழந்தையை போலதான்
நீ வாழ்கிறாய் ...

அதன் ஒவ்வொரு அசைவையும்
உற்று கவனிக்கும் ஒரு தாயை போலதான்
நான் வாழ்கிறேன்...

உன்னை பற்றி...
உனக்கு தெரியுமென்றாலும்...
எனக்கு தெரிந்த நீ...
ரகசியமானவள்... மழை போலவே...