மழையிடம் கடன் வாங்கிய துளிகளை
மழை விட்ட பின்பும் தூறிக் கொண்டிருந்தன
சாலையோர மரங்கள்...
பிள்ளையின் கிறுக்கல் போல்
புரியாத ஓவியமாய்
வானமெங்கும் பரவி கிடந்தன மேகங்கள்...
இன்னதென்று சொல்ல முடியாத
வண்ணம் கொண்ட பூக்கள் மீது மயக்கம் கொண்டு
வனமெங்கும் சுற்றி திரிந்தன பட்டாம்பூச்சிகள்...
வண்ணங்கள் வழியே வானளக்க
முற்பட்ட ஓவியன் யாரென்று தெரியவில்லை
அழகாய் பூத்திருந்தது வானவில்...
கடந்து சென்ற வாகனத்தின் சன்னல் வழி
கையசைத்த குழந்தையின் சிரிப்பில் தெறித்து விழுந்தது எங்களுக்கிடையேயான அந்நியம்...
வாகனத்தின் வேகத்தில் என் நெற்றிப் பட்டு
தெறித்த மழைத்துளியின் ஈரத்தில் உணர்ந்தேன்
எனக்கான இயற்கையின் முத்தத்தை...
Tuesday, August 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment